திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகேயுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்த அம்பிகா (32), துறையூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் துறையூர் பாலக்கரை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள், காவலரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்று நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை மீட்கச் சென்ற காவலர் அம்பிகாவின் கையை, வாகனம் ஓட்டி வந்த இளைஞர் எதிர்பாராத விதமாகப் பிடித்துக் கொண்டு, ரத்தம் வரும் அளவிற்கு வலது கைக் கட்டை விரலைக் கொடூரமாகக் கடித்துள்ளார். வலியால் அலறிய பெண் காவலரை மீட்ட பொதுமக்கள், கடித்த நபரை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
காயமடைந்த காவலர் அம்பிகா உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிடிபட்ட இளைஞர்களிடம் துறையூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடித்த நபர் முசிறி தாலுகா மேலபுதுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (18) என்பதும், அவருடன் வந்தவர் வடக்கு நல்லியம்பட்டியைச் சேர்ந்த அஜீத் (30) என்பதும் தெரியவந்தது. இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால், காவலரைக் கண்டதும் பிடிபட்டு விடுவோம் என்ற அச்சத்தில் தப்பித்துச் செல்ல முயன்றதும், பிடிபட்டபோது மதுபோதையில் காவலரின் கையைத் தாக்கியதும் உறுதி செய்யப்பட்டது.
இதன்பேரில் ஜெகதீசன் மற்றும் அஜீத் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
