சமூக வலைத்தளமான X-ல் வைரலாகி வரும் அந்த வீடியோ, வறுமையின் கோர முகத்தையும், அதே சமயம் ஒரு குடும்பத்தின் பிணைப்பையும் ஒருசேரக் காட்டுகிறது. கொட்டும் மழையில் நனைந்தபடி அந்தத் தந்தை அடுப்பைப் பற்றவைத்துச் சமைக்கப் போராட, மழையினால் அடுப்பு அணைந்துவிடக் கூடாது என்பதற்காக அவரது இரு பிள்ளைகளும் ஒரு பலகையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள். பசியைத் தீர்க்கப் போராடும் அந்தத் தந்தையும், அவருக்கு அரணாக நிற்கும் அந்தச் சிறுவர்களும் நமக்குள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள்.

​இந்தக் காட்சி இந்தியாவின் மறுபக்கத்தை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகிறது. ஒருபுறம் நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதாகக் கூறப்பட்டாலும், அடிப்படைத் தேவைகளுக்காகக் கூடப் போராடும் மக்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை இது நினைவூட்டுகிறது. “இந்தியாவின் அழுகை” எனப் பகிரப்படும் இந்த வீடியோ, வெற்று தேசபக்தி கோஷங்களை விட, வறுமை ஒழிப்பிற்கான உண்மையான நடவடிக்கைகளே இப்போதைய அவசரத் தேவை என்பதை உரக்கச் சொல்கிறது.