பிரபல சில்லறை விற்பனை நிறுவனமான டி-மார்ட் (D-Mart) கிளையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு காணொளி தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த முந்திரிப்பருப்பு பாக்கெட்டின் உள்ளே உயிரோடு புழுக்கள் நெளிவது அப்பட்டமாகத் தெரிகிறது. பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் தரம் குறித்து பெரும் கேள்வியை எழுப்பியுள்ள இந்த வீடியோ, வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது.

இந்தக் காணொளியைப் பதிவிட்ட பயனர், “இந்தியா உலகின் நோய் தலைநகராக மாறுவதற்கு இது போன்ற அலட்சியங்களே காரணம்” என்ற ரீதியில் காட்டமாக விமர்சித்துள்ளார். உணவுப் பாதுகாப்புத் துறையின் அலட்சியத்தையும், பெரிய நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுவதையும் நெட்டிசன்கள் பலரும் கண்டித்து வருகின்றனர். தரமான உணவு என்பது அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.