உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கக் கோரி இளைஞர் ஒருவர் 30 அடி உயர தண்ணீர் தொட்டியின் மேல் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாம்நகர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறிய ஹர் பிரசாத் மௌரியா என்ற அந்த இளைஞர், “தனது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும், துணிகளை துவைக்கக் கூட ஆள் இல்லை என்பதால் தனக்கு உடனடியாக இரண்டாவது மனைவி வேண்டும்” என்றும் கத்தி கூச்சலிட்டார்.

சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியே பதற்றத்தில் ஆழ்ந்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த இளைஞரை சமாதானப்படுத்தி பாதுகாப்பாக கீழே இறக்கினர்.

இது குறித்து அவரது பெற்றோரிடம் விசாரித்தபோது, ஹர் பிரசாத் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றதும் தெரியவந்தது.

“>

 

தற்போது தனது 6 வயது மகனுடன் வசித்து வரும் அவர், சமீபத்தில் வேலைக்காக பஞ்சாப் சென்றுவிட்டு ஊர் திரும்பியுள்ளார். மீண்டும் இது போன்ற செயல்களில் அவர் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ளுமாறு அவரது குடும்பத்தினருக்கு அறிவுரை வழங்கிய போலீசார், அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.