பெங்களூருவின் ஹெக்கனஹள்ளி (Hegganahalli) மெயின் ரோட்டில் நடந்த ஒரு கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 13-ம் தேதி இரவு 7 மணியளவில், 42 வயதான சேத்தன் குமார் என்பவர் மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடியபடி சாலையோரம் நடந்து சென்றுள்ளார்.

அப்போது நிலைதடுமாறி அவர் திடீரென சாலையில் விழ, அவருக்குப் பின்னால் வந்த தனியார் பேருந்தின் பின்சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த சேத்தன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து நடந்த உடனேயே பேருந்தை நிறுத்தாமல் டிரைவர் நரேந்திரா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து காமாக்ஷிபால்யா (Kamakshipalya) போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், விபத்தை ஏற்படுத்திய பேருந்து அடையாளம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த டிரைவர் நரேந்திராவை போலீஸார் கைது செய்துள்ளனர். “விபத்து எதிர்பாராமல் நடந்திருந்தாலும், தகவல் தெரிவிக்காமல் தப்பியோடியது குற்றமாகும்” எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.