உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித்தில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற ‘நாடாளுமன்ற விளையாட்டுத் திருவிழா’ (MP Sports Festival) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில், முன்னாள் மாநில அமைச்சர் ஹேம்ராஜ் வர்மா பங்கேற்றார். பந்தயத்தின் போது எதிர்பாராத விதமாக ஹேம்ராஜ் வர்மா நிலைதடுமாறி முகத்தில் அடிபடும் வகையில் கீழே விழுந்தார்.

இச்சம்பவம் அங்கு கூடிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அவர் கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

இந்த வீழ்ச்சி குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஹேம்ராஜ் வர்மா, தான் ஓடிய டிராக்கில் வேறொரு நபர் புகுந்து தன்னை தள்ளிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மாவட்ட பஞ்சாயத்துத் தலைவரின் கணவர் குர்பாக் சிங் தவறுதலாக ஹேம்ராஜின் பாதையில் நுழைந்து மோதியதே இந்த விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

“அரசியலிலும் இதுபோன்ற சதிகளையும் வீழ்ச்சிகளையும் சந்தித்தே முன்னேறியுள்ளேன், நான் தொடர்ந்து ஓடுவேன்” என அவர் உணர்ச்சிவசமாகப் பதிவிட்டுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக அவருக்குப் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சமாஜ்வாடி கட்சியில் அமைச்சராக இருந்த ஹேம்ராஜ், சமீபத்தில் பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.