மகாராஷ்டிரா மாநிலம், மீரா ரோட்டில் நடந்த துயரச் சம்பவத்தில், காவலர் ஒருவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, கணவர் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. மீரா பாயந்தர் வசை விரார் காவல்துறையில் காவலராகப் பணியாற்றி வரும் பிரபு சாட்டே என்பவரின் மனைவி சுவாதி சாட்டே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தான் இவர்களுக்குத் திருமணம் நடந்துள்ளது. திருமணமான ஒரு சில நாட்களிலேயே பிரபு சாட்டே மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், கர்ப்பமாக இருந்த நாத்தனாரை கவனிப்பதற்காக புனேவில் இருந்த சுவாதி, அங்கு தனது மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோரால் மனரீதியான துன்புறுத்தலை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அண்மையில், இரு குடும்பத்தாரும் கூடிப் பேசி சமாதானம் ஏற்பட்ட போதும், விடுமுறையின் போது பிரபு சாட்டே மீண்டும் மது அருந்தச் சென்றதால், தம்பதியிடையே தொலைபேசியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த சுவாதி, தனது தாயிடம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறிவிட்டு, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சுவாதியின் தாயாரின் புகாரின் பேரில், பிரபு சாட்டே, அவரது தாய் ரஞ்சனா சாட்டே, தந்தை பகவான் சாட்டே மற்றும் சகோதரி புஷ்பா சனாப் ஆகியோர் மீது மீரா ரோடு போலீஸார் வழக்குப் பதிந்தனர். வழக்கில் முதல் குற்றவாளியான காவலர் பிரபு சாட்டே கைது செய்யப்பட்டு, டிசம்பர் 3-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற விவரங்கள் அப்பலா மஹநகர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.