துர்கா பூஜையை ஒட்டி, வண்ணமயமான பந்தல்களும், கலைநயமிக்க கருப்பொருள்களும் பொதுவாக மக்களை கவரும். ஆனால், மேற்கு வங்காள மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜங்கிபாரா பகுதியிலுள்ள சக்பூரில் நடந்த ஒரு பந்தல் அமைப்பு, தற்போது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இந்த பந்தல், சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் பக்தியும் கலைச்சுவையும் பாராட்டப்படுவதாக இருந்தாலும், இக்காட்சியில் விபத்து நிமிடங்களை துல்லியமாக வடிவமைத்து காட்டியிருப்பது, பலரை உணர்ச்சி ரீதியாக உலுக்கியிருக்கிறது.
ஜூன் மாதம் நடைபெற்ற இந்த பயங்கர விமான விபத்தில், அகமதாபாதிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 242 பயணிகள் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
Not all Bongs, but Bongs always 🤡 pic.twitter.com/pjGnf594pI
— desi mojito (@desimojito) October 3, 2025
இந்நிகழ்வின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பந்தலில், ஒரு மாதிரி விமானம் ஒரு கட்டிடத்தில் மோதும் காட்சி அழிவின் தருணங்களை மீண்டும் உருவாக்கி காண்பிக்கப்படுகிறது. இது ஆன்லைனில் வைரலாக பரவி, பலரிடம் எதிர்மறையான விமர்சனங்களை ஈர்த்துள்ளது. இந்த அமைப்பை பார்த்த சிலர், “ஒரு சோகத்தை மகிமைப்படுத்துவது அவமானம்” எனக் கடுமையாக விமர்சிக்க, மற்றோர் பயனர், “இவ்வளவு வேதனையான விபத்தை மீண்டும் உருவாக்குவது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மிகுந்த வலியளிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இது நம்முடைய பண்டிகைகளைக் கேலியடிக்கும் செயல். இறந்தவர்களை மதித்து இரக்கத்துடன் நினைவுகூரும் நேரமாய் இருக்க வேண்டிய சமயத்தில், இதுபோன்ற காட்சிகள் தேவையா?” எனக் கேட்டவர்கள் அதிகம். இப்பந்தல் அமைக்கப்பட்டதற்கான நோக்கம், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும், உயிர் காப்பாற்ற முயன்றவர்களின் துணிச்சலுக்கும் மரியாதை செலுத்துவதே என அமைப்பாளர்கள் கூறினாலும், இணையத்தில் பெரும்பாலானோர் அதனை ஏற்க மறுக்கின்றனர்.
மேலும் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை நடைபெற்ற நவராத்திரி 2025, துர்கை வழிபடும் புனித காலமாகக் கொண்டாடப்பட்டது. இதன் உச்சமாக விஜயதசமி தினம் விழாக்கள் நிறைவுபெற்றன. ஆனால், இப்படியொரு சர்ச்சைக்குரிய கருப்பொருளைத் தேர்வு செய்தது இந்த பண்டிகையின் இயல்புக்கும், பக்தியின் தூய்மைக்கும் எதிராக இருப்பதாக மத சமூகங்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
