மும்பையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விராரின் குளோபல் சிட்டி பகுதியில், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) அதிகாலையில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒரு சிவப்பு நிற ஸ்கூட்டரை திருட முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட ஒருவரை உள்ளூர் மக்கள் பிடித்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக, அவரை தாக்குவதற்கு பதிலாக, உணவு கொடுத்து, சிகரெட் புகைக்க வைத்து, பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
வீடியோவில், பயத்துடன் காணப்பட்ட சந்தேக நபர், உள்ளூர் மக்களால் பிடிக்கப்பட்டு, திருட்டு குறித்து தொடர்ந்து விசாரிக்கப்படுகிறார். ஆனால், அவர் பேசிய மொழி உள்ளூர் மக்களுக்கு புரியவில்லை. முதலில் அது தெலுங்கு என நினைத்தவர்கள், தெலுங்கு தெரிந்த ஒருவரை அழைத்து பேச வைத்தபோது, அவருக்கும் அந்த மொழி புரியவில்லை.
இதன்பின், மக்கள் அவருக்கு உணவு கொடுத்து, ஒருவர் அவரது தலைமுடியை பிடித்தவாறு சிகரெட் கொடுத்து புகைக்க வைத்தனர். இறுதியாக, காவல்துறை வந்து அவரை விசாரித்து, பைக்கில் அழைத்துச் சென்றது. கூட்டம் அவரை வழியனுப்பிய விதம், திருட்டு சந்தேக நபருக்கு என்று பார்க்காத வினோதமான நட்பு உணர்வை வெளிப்படுத்தியது. இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.
