மராட்டியத்தின் நெருல் நகரில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் நடன பார் தொடர்பாக பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. ரகசிய கேமரா மூலம் வெளியாகிய காட்சிகளில், நடன அழகிகளின் மீது வாடிக்கையாளர்கள் ரூபாய் நோட்டுகளை வீசும் அதிர்ச்சியான காட்சிகள் பதிவாகி உள்ளன. இது மராட்டிய உரிமம் மற்றும் பொழுதுபோக்கு சட்டத்திற்கு எதிரான செயல் என்பதுடன், அந்த பார் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ளதுடன், பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வைரலாகியுள்ள வீடியோகளின் அடிப்படையில், நவி மும்பை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். உச்ச நீதிமன்றம் நடன பார்கள் செயல்பட கடுமையான நிபந்தனைகளை விதித்திருந்தாலும், பல இடங்களில் இந்நிபந்தனைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மராட்டிய மந்திரி யோகேஷ் கதம் உத்தரவின் பேரில் வஷி பகுதியில் ஒரு நடன பாரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். உரிமம் இல்லாமல் செயல்பட்ட அந்த பாரில் ஆபாச நடனங்கள் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து 40 பெண்கள் மீட்கப்பட்டதுடன், பார் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 46 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் நடன பார்களுக்கு எதிராக நடவடிக்கையை தீவிரமாக்கியுள்ளது.