மத்தியப் பிரதேசம்: வயது வந்த பெண் ஒருவர், தனது விருப்பப்படி ஏற்கனவே திருமணமான ஆணுடன் வாழ முடியும் என மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உறுதியாகத் தெரிவித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட அந்த பெண், திருமணமான ஆணுடன் சென்றுவிட்டதாக அவரது பெற்றோர் புகார் அளித்த நிலையில், அந்த பெண்ணை மீட்டு அவர்களிடம் ஒப்படைக்க கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன் மற்றும் பிரதீப் மிட்டல் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது.
அந்த பெண் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தனது விருப்பப்படி அந்த ஆணுடன் தொடர்ந்தும் வாழ விருப்பமுள்ளதாகவும், பெற்றோருடன் திரும்பி செல்ல முடியாது என்றும் தெரிவித்தார். இதை அடுத்து நீதிமன்றம், “வயது வந்த பெண் தனது விருப்பப்படி யாருடன் வாழ வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை உண்டு. திருமணமான ஆணுடன் வாழ்வதைத் தடுக்கும் தனிச்சட்டம் எதுவும் இல்லை. அந்த ஆணின் முதல் மனைவியே மட்டுமே இரட்டைத் திருமண வழக்கு தொடரும் உரிமையுடையவர்” எனத் தெரிவித்தது.
இதனையடுத்து, அந்தப் பெண்ணிடம் அவள் விருப்பத்துடன் அந்த ஆணுடன் வாழ்வதாக உறுதிமொழி பெறப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறைக்கு அந்த பெண்ணின் விடுதலையை உறுதி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அந்த பெண் வாழ விரும்பும் ஆணிடமிருந்து அவளது பாதுகாப்புக்கான உறுதி பெறப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிடும் வகையில் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது
