மும்பை பன்வெல் செல்லும் உள்ளூர் ரயிலின் கூரையில் பயணித்த நபர் ஒருவர், மேல்நிலை மின்கம்பியில் சிக்கியதில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை மாலை, வடாலாவில் இருந்து பன்வெல் நோக்கி செல்வதற்காக புறப்பட்ட ஹார்பர் லைன் ரயிலில், 30 வயதுடைய அங்கூர் பாண்டே என அடையாளம் காணப்பட்ட நபர், மன்குர்டில் ரயில் கூரையில் ஏறியுள்ளார். ரயில் மாலை 5:10 மணி அளவில் வாஷி நிலையத்தை சென்றடைந்தபோது, அவர் மேல்நிலை மின்சார கம்பியைத் தொடுவதன் மூலம் கடும் தீக்காயமடைந்தார்.
இந்த காட்சியை பார்த்த பயணிகள், உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, அவரை கீழே இறக்கி, வாஷி நகராட்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேலான சிகிச்சைக்காக மும்பை ஜே.ஜே. மருத்துவமனைக்கு மாற்றி வைப்பு செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வாஷி ரயில்வே காவல் நிலையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து அந்த நிலையத்தின் மூத்த ஆய்வாளர் கிரண் உண்டரே கூறியதாவது: “பாண்டே, தற்கொலை நோக்கத்தில் ரயில் கூரையில் ஏறியிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கின்றோம். தற்போது, அவரது குடும்பத்தை தொடர்பு கொண்டு, சம்பவத்துக்கான நோக்கத்தை உறுதிப்படுத்த முயற்சி செய்து வருகிறோம்,” என்றார். இந்த சம்பவம் காரணமாக ஹார்பர் லைன் ரயில் சேவைகளில் தற்காலிக இடையூறு ஏற்பட்டது.
