சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு பதிவு, ஒரு நிறுவனத்தின் கடுமையான வருகை விதிமுறைகள் குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட இந்தப் பதிவில், ஒரு ஊழியர் தனது பணியிடத்தை ‘பள்ளி போன்ற சூழல்’ என விமர்சித்துள்ளார்.

குறிப்பாக, காலை 9:30 மணிக்குப் பிறகு முன்கூட்டியே தெரிவிக்காமல் அலுவலகம் வந்தால், அது நிறுவன விதிகளின்படி அரை நாள் விடுமுறையாகக் கருதப்படும் என்று குழுத் தலைவர் அனுப்பிய செய்தியையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்தச் செய்தியில், “எந்த காரணத்திற்காகவும் தாமதமாக வர வேண்டும் என்றால், முதலில் மேலாளருக்கோ அல்லது நேரடியாக எனக்கோ தெரிவிக்க வேண்டும். 9:30க்கு பிறகு அனுமதி இல்லாமல் வந்தால், அது அரை நாள் விடுமுறையாகக் கருதப்படும்” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு அந்த ஊழியர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். “நாம் பள்ளியில் இருக்கிறோமா, அல்லது பெரியவர்கள் போல வேலை செய்கிறோமா? போக்குவரத்து நெரிசல், அவசரநிலை அல்லது திடீர் சூழ்நிலை காரணமாக சிறிது தாமதமாக வந்தாலும், ஒருவரை தண்டிப்பது தவறானது. நேரம் பின்பற்றுவது மட்டும் அல்ல, வேலை சரியாக செய்வதுதான் முக்கியம்” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். ஒருவரின் பரிந்துரைப்படி, “நிறுவனம் தனது உள்நுழைவு-வெளியேறு நேரத்தை ஒரு மணி நேரம் மாற்றிக் கொள்ளலாம்” என்றும், குருகிராம் மற்றும் நொய்டா போன்ற இடங்களில், பல நிறுவனங்கள் உச்ச நேர போக்குவரத்தைத் தவிர்க்க, தங்கள் ஷிப்ட் நேரங்களைத் தாங்களாக மாற்றிக் கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

சிலர், இந்த வகை கொள்கைகள், நிறுவனத்தின் பணியாளர் நலனுக்கு விரோதமானவை என்றும், சர்வதேச போட்டியில் முன்னிலை பெற வேண்டுமெனில், இத்தகைய பழைய சிந்தனைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். “அமெரிக்கா போன்று திறந்த பணியாளர் கலாச்சாரம் தேவை, சீனாவின் கட்டுப்பாட்டு முறையுடன் போட்டியிட முயற்சிப்பது பயனற்றது” என்ற கருத்தும் பரவலாக பகிரப்பட்டுள்ளது.