உத்தரபிரதேசத்தின் பராபங்கியில் இன்று காலை நிகழ்ந்த பயங்கரமான சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், 17 பேர் காயமடைந்துள்ளனர். அதாவது, NCERT ஏற்பாடு செய்த பயிற்சி அமர்வில் கலந்து கொள்ள, 4 பெண் ஆசிரியர்கள் உட்பட சுமார் 40 பயணிகள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில், பராபங்கியில் இருந்து ஹைதர்கர் நோக்கி சென்ற பேருந்து, ஜெய்த்பூர் காவல் நிலைய வரம்பில் உள்ள ஹராக் கிராமம் அருகே ராஜா பஜார் பகுதியில் சென்றபோது, திடீரென ஒரு பெரிய மரம் பேருந்தின் முன்பகுதியில் விழுந்தது. இதனால், பேருந்து ஓட்டுநர் மற்றும் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்துக்குப் பிறகு, பேருந்தில் சிக்கிய பயணிகள் கத்தி அலறியபடி உதவி கோரினர். இதுகுறித்து சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோவில், சிக்கியிருந்த ஒரு பெண், “இங்கே மக்கள் உயிர் மரண போராட்டத்தில் இருக்கிறார்கள், ஆனால் நீங்கள் வீடியோ எடுக்கிறீர்கள்” என்று வேதனையுடன் கூறும் காட்சி பரவலாக வைரலாகியுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த சிலர் உடனடி மீட்பு பணியில் ஈடுபடாமல், கைப்பேசியில் வீடியோ எடுத்து நின்றது, இணையத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

கிராம மக்கள் சத்தம் கேட்டு விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்த 17 பேர் உடனடியாக அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதிகாரிகள், விபத்தில்  4 பெண்களும், பேருந்து ஓட்டுநரும் உயிரிழந்ததாக  உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த துயரமான விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.