மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கௌரிஹார் பகுதியில், மவாய்காட் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

மதியம் 12 மணியளவில் 5ஆம் வகுப்பு மாணவர்கள் படித்து கொண்டிருந்த நிலையில், தலைமை ஆசிரியர் நாற்காலியில் நிதானமாக தூங்கிக்கொண்டிருந்தார். இது குறித்து கேட்டபோது, “எனக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் தூங்கிவிட்டேன்” என அவர் பதிலளித்துள்ளார்.

இந்த சம்பவம் கல்வித் துறையினர் மற்றும் பொதுமக்களிடையே கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கௌரிஹார் பி.ஆர்.சி.சி. அதிகாரி அமர்நாத் வியாஸ், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இது போலவே, ஹத்வாரா பகுதியில் உள்ள மற்றொரு அரசு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் பாயில் மீது தூங்கிக்கொண்டிருந்த வீடியோ சமீபத்தில் வெளியாகி, அவரை இடைநீக்கம் செய்தனர்.

மாவட்ட கல்வி அதிகாரி ஆர்.பி. பிரஜாபதி, ஆசிரியர்கள் இவ்வாறு வகுப்பறையில் தூங்குவது முற்றிலும் தவறு என்றும், உடல்நலம் சரியில்லாத நிலையில் உள்ளவர்களுக்கு முன்பே விடுப்பு எடுத்து குழந்தைகளின் கல்விக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர்கள் நேர்மையோடு பணியாற்ற வேண்டியது அவசியமாகியுள்ளது.