அமெரிக்கா சமீபத்தில் மிக முக்கியமான வரி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. இது மட்டுமல்லாமல், ரஷ்யாவுடனான எரிசக்தி (எண்ணெய்) வர்த்தகத்தை தொடர்ந்து மேற்கொண்டால் இந்தியா மீது கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காது என்று கேள்விப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளர்.

டிரம்ப் கருத்து – இது ஒரு நல்ல முடிவு:
ட்ரூத் சோஷியல் என்ற சமூக வலைத்தளத்தில், “இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காது என கேள்விப்பட்டேன் . அது உண்மையா இல்லையா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது ஒரு நல்ல நடவடிக்கை என்று நினைக்கிறேன்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போரை நிதி ஆதரிக்க வேண்டாம் என்பதற்காக ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து அழுத்திய நிலையில், டிரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

“>

 

இந்தியாவின் பதில் :
இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் உடனே பதிலளித்துள்ளது. செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, “இந்தியா-ரஷ்யா உறவுகள் நீண்டகால நம்பிக்கையின் அடிப்படையில் தொடர்கின்றன. அது காலத்தால் சோதிக்கப்பட்ட பன்முக கூட்டாண்மை. அதேபோல், இந்தியா-அமெரிக்க உறவுகளும் வலுவாகவே உள்ளன. இவை ஜனநாயக மதிப்புகள், பங்கு கொள்ளப்பட்ட நலன்கள், மக்களிடையேயான உறவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தற்போதைய பதட்டம் இருந்தாலும், இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வளர்வதை நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறைவு – காரணம் என்ன?
சமீபத்திய ஊடக தகவல்களின் படி, இந்தியாவின் சில எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதற்கான காரணமாக கப்பல் போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் சில உள்நாட்டு நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன. இதுபற்றி இந்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்தியாவின் நடவடிக்கைகள் அமெரிக்க அழுத்தத்துடன் நேரடி தொடர்பில் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

இந்தியா ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து எடுத்திருக்கும் முடிவுகள், உலக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. டிரம்ப் அதைப் பாராட்டினாலும், அதே நேரத்தில் அதை உறுதி செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சகம் அதற்கு நேரடி பதில் அளித்து, இருநாட்டு உறவுகளும் பாதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.