உத்தரப்பிரதேச மாநிலம் காசியபாத்தில் உள்ள இந்திராபுரம் பகுதியில் இயங்கி வந்த கே.எஃப்.சி. அசைவ உணவகத்தில், ஷ்ரவன் மாதத்தில்(ஜூலை, ஆகஸ்ட்) அசைவ உணவு விற்கக்கூடாது எனக் கூறி, இந்து ரக்ஷா தளம் என்ற ஹிந்து அமைப்பினர் கடையை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையில் காவிக்கொடியுடன் நுழைந்த அந்த அமைப்பினர், ஊழியர்களை மிரட்டி, “இது சைவ மாதம் – அசைவ உணவு விற்கக்கூடாது” என வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து, கடையை நிர்வாகிகள் தற்காலிகமாக மூடிவைத்தனர்.

மேலும், கடை முன்பாக ‘சைவ உணவகமே’ என்ற போர்டும் வைக்கக் கட்டாயப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில், கே.எஃப்.சி. உணவக மேலாளர், “அசைவ உணவிற்காகத்தான் மக்கள் வருகிறார்கள்.

இப்போது கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது” என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதேபோல் மற்றொரு தனியார் அசைவ உணவகத்தையும் குறித்த அமைப்பினர் மூட வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டாலும், கடையில் நுழைந்து ஊழியர்களை மிரட்டியதால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.