கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராகவேந்திரா யாதவ் (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரச்சிதா (26) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக இளம் பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் வேறொரு வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். இதனால் அவரது காதலன் ரட்சிதா வீட்டிற்கு சென்று அவருடைய பெற்றோரிடம் பேசினார். ஆனால் தங்களுடைய பெண்ணை தருவதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில் வாலிபரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் மன வேதனையில் இருந்த காதல் ஜோடி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் ஒரு வனப்பகுதியில் ஆட்டோவில் தூக்கில் தொங்கிய நிலையில் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆட்டோவில் வைத்து இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.