
மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில், சாக்லேட் வாங்க பணம் கேட்டதற்காக, ஒரு குடிகார தந்தை தனது 4 வயது மகளைக் கழுத்தை நெரித்து கொலை செய்த கோர சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கொடூரமான செயலில் ஈடுபட்ட பாலாஜி ரத்தோட் என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினர் தெரிவித்த தகவலின்படி, பாலாஜி ரத்தோட் மதுவுக்கு அடிமையானவர். தொடர்ந்து குடும்பத்தினருடன் சண்டை மற்றும் மனஉளைச்சலில் இருந்து வந்த இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி வர்ஷாவுடன் ஏற்பட்ட தகராறுக்கு பிறகு, வர்ஷா வீட்டை விட்டு தந்தையின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
அதே நேரத்தில் அவரது மகள் ஆருஷி (4) சாக்லேட் வாங்க பணம் கேட்டார். பணம் தர மறுத்த தந்தையை வற்புறுத்த முயன்ற சிறுமிக்கு, பாலாஜி கோபம் அடைந்ததால், சேலையால் கழுத்தை நெரித்து அவளைக் கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து மனைவி வர்ஷாவுக்கு தகவல் கிடைத்ததும், அவர் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட பாலாஜி ரத்தோட் கைது செய்யப்பட்டார். “என் மகளைக் கொன்ற என் கணவருக்கு கடும் தண்டனை, மரண தண்டனை கூட வழங்கப்பட வேண்டும்” என வர்ஷா வலியுறுத்தியுள்ளார்.