சென்னை தாம்பரம் அருகே ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் பகுதியில் காமேஷ் என்ற 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் தன் வீட்டின் அருகே வசித்து வரும் நிஷா என்ற 21 வயது பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் வாலிபரை காதலித்த நிலையில் கடந்த 5 வருடங்களாக இருவரும் காதல் உறவில் இருந்தனர். இதில் நிஷாவும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று கிளம்பிய நிலையில் வேலைக்கு செல்லாமல் பைக்கில் கோவளம் கடற்கரைக்கு சென்றனர்.

அதன்படி வண்டலூர் கேளம்பாக்கம் சாலை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே தார் சாலை குண்டும் குழியுமாக இருந்த நிலையில் அங்கு சாலையில் மணல் சிதறி இருந்தது. இந்நிலையில் சாலைப் பள்ளத்தில் திடீரென பைக் ஏறி இறங்கியதில் பின்னால் இருந்த அந்த வாலிபரின் காதலி கீழே விழுந்தார். வாலிபர் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில் பின்னால் அமர்ந்திருந்த அவரது காதலி ஹெல்மெட் அணியவில்லை. இந்த விபத்தில் தலையில் நிஷாவுக்கு பலத்த காயம் அடைந்த நிலையில் தன் காதலியை மடியில் தூக்கி வைத்து வாலிபர் கதறி துடித்த நிலையில் அவரது மடியிலேயே உயிர் பிரிந்து விட்டது.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் மகளை நினைத்து கதறி துடிக்கும் சம்பவம் அங்கிருந்தவர்களை வேதனையில் ஆழ்த்தியது. இது தொடர்பாக காமேஷிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவரிடம் லைசன்ஸ் இல்லை என்பது தெரிய வந்தது. அவரது காதலியின் மரணத்திற்கு ஹெல்மெட் போடாததுதான் முக்கிய காரணம். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.