
உலகின் மிகவும் காரமான கறியை சாப்பிடும் சவாலை லண்டனில் உள்ள ‘பெங்கால் வில்லேஜ்’ (Bengal Village) என்ற உணவகம் வழங்கி வருகிறது. பிரிக் லேன் பகுதியில் அமைந்துள்ள இந்த உணவகத்தில், 72 வகையான காரமான மசாலாப் பொருட்கள் கலந்த இந்த கறி, உணவுப் பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதன் விலை சுமார் ரூ.2,500 (21.95 பவுண்டுகள்) ஆக இருந்தாலும், 15 நிமிடத்திற்குள் அதை சாப்பிட்டால் இலவசமாக வழங்கப்படும் என்றும் உணவகம் தெரிவிக்கிறது. ஆனால், சாப்பிடும் போது ஏற்படும் உடல்நல பாதிப்புகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல எனவும் எச்சரிக்கிறது.
This guy tried London’s hottest curry and look what it did to him…😭😭😭😭😭 pic.twitter.com/GiUc51WLrt
— Out of Context Human Race (@NoContextHumans) June 23, 2025
இந்த சவாலை ஏற்க வந்த டேனியல் என்ற இளைஞர், கறியின் முதல் கடியை சாப்பிட்டவுடன் உடல் முழுவதும் எரிவதை உணர்ந்தார். உடனே அவரது உடல்நிலை மோசமடைந்து, நடக்க முடியாத நிலைக்குச் சென்றார்.
வீடியோவில் அவர் நடைபாதையில் அமர்ந்து துடிக்கிறார், உடனே தனது டி-ஷர்ட்டை கழற்றி வைத்திருக்கும் காட்சியும் வெளியாகியுள்ளது. உணவக உரிமையாளர் ராஜ், மாம்பழம் கலந்த சிறப்பு பானத்தை வழங்கி காரத்தைக் குறைக்க முயற்சி செய்தபோதும், டேனியல் நேராக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இச்சம்பவம் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவி வருகின்றது. “@NoContextHumans” என்ற X பக்கம் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது. தற்போது 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
சவாலை ஏற்ற டேனியலின் நிலை பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சிலர் “சகோதரர் திரும்பி வர மாட்டார் போல!” என மீம்ஸ் உருவாக்கியுள்ளனர். பலரும் இதுபோன்ற சவால்கள் பிரபலமடைவதற்காக மட்டுமே செய்யப்படுகின்றன என விமர்சனம் தெரிவிக்கின்றனர்.