
சென்னை மாவட்டம் அசோக் நகர் பகுதியில் ஜூன் 15ஆம் தேதி கலையரசன் என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி வெட்டி தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கலையரசனின் மனைவி தமிழரசியின் சகோதரர்களான சக்திவேல், சஞ்சய் உறவினரான சுனில் குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கலையரசன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கைதான மூன்று பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் போலீசார் நடத்தி விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது கலையரசன் தமிழரசி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக தற்போது கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த ஆண்டு இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது கலையரசன் சக்திவேலை தாக்கியுள்ளார்.
இதற்கு பழி வாங்கும் விதமாக சக்திவேல் உள்ளிட்ட மூன்று பேரும் கலையரசனை வெட்டியது தெரியவந்தது. போலீசார் தமிழரசியை கைது செய்து விசாரித்த போது ஆண் நண்பருடன் உறவில் இருப்பது கணவருக்கு தெரிந்ததால் சகோதரர்களை தூண்டிவிட்டு கணவரை கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.