சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு மாணவனிடம் கெமிக்கல் பாட்டில்கள் அடங்கிய மூட்டையை தூக்கச் சொன்னதால், அவை உடைந்து உடலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலாஜி – சந்தியா தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 25ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த போது, அவரது உடலில் வெந்த காயங்களுடன் இருந்தார். உடனடியாக பெற்றோர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

மாணவன் கூறியதுபடி, பள்ளியில் பணியாற்றும் தூய்மை பணியாளர் ஒருவர் ஒரு மூட்டையை ஆய்வகத்துக்கு கொண்டு செல்லச் சொன்னதாகவும், அந்த மூட்டையை எடுத்துச் செல்லும் போதே அதிலிருந்த கெமிக்கல் பாட்டில்களில் ஒன்று உடைந்து உடலில் வீணாகி காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போதும், நிர்வாகம் போதிய விளக்கம் அளிக்கவில்லை என்பதால், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரான ஏமா மற்றும் மற்றொரு ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேலும், காயம் ஏற்படுத்திய பாட்டிலை இதுவரை ஆய்வகத்துக்கு அனுப்பாததற்கும் பெற்றோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறித்த பாட்டிலில் உள்ள பொருள் என்ன என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.