ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டம் செக்டார் 4 பகுதியில் அமைந்துள்ள பூங்காவுக்கு செல்ல முயன்ற அன்ஷுல் பெனிவால் என்ற 20 வயது இளைஞர், தெருவில் வந்த பசுவால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பசு திடீரென அன்ஷுலை பின்தொடர்ந்து ஓடி சென்று தள்ளி, பின்னர் தன்னுடைய கால்களால் மிதிக்கின்ற காட்சிகள் தெளிவாக உள்ளன.

அன்ஷுல் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பின் தொடர்ந்த பசு, திடீரென அவர் மீது தாக்குதல் நடத்துகிறது. தப்பிக்க முயன்ற அன்ஷுல் ஓடிச் சென்றபோதும், பசு பின் தொடர்ந்து அவரை தரையில் கீழே தள்ளி பலமுறை காலால் மிதித்துவிடுகிறது. இந்த தாக்குதலால் அவரது தலையும் முதுகும் படுகாயமடைந்துள்ளன.

அன்ஷுலின் அலறலைக் கேட்டு அருகிலுள்ள பொதுமக்கள் ஓடி வந்து அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் பசு அவர்களையும் தாக்க முயற்சி செய்துள்ளது. கடும் முயற்சிக்குப் பிறகு பசுவை விரட்டிவிட்டு அன்ஷுலை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை தற்போது நிலையான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் ரேவாரி மக்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பலர் தெரு விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் பல முறை புகார்கள் பெற்றும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.