
சென்னை வண்டலூரில் யூ-டர்ன் செய்யும் போது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த 23 வயதுடைய இளம்பெண், ஹெல்மெட் அணியாமையால் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்து அவரது காதலன் கண் முன்னே நிகழ்ந்துள்ளதால் அதிர்ச்சி மற்றும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியைச் சேர்ந்த காமேஷ் (25) என்பவரும், அவரது காதலியான நிஷா (23) என்பவரும் இருசக்கர வாகனத்தில் வண்டலூர் நோக்கி பயணித்தனர். முதலில் அவர்கள் மகாபலிபுரம் செல்ல திட்டமிட்டிருந்தாலும், வழியில் நிஷா தனது ஆசைப்படி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு செல்லலாம் என கூறியதால், காமேஷ் தனது பைக்கை யூ-டர்ன் செய்ய முயன்றார். அந்த நேரத்தில், பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தது.
விபத்தின் போது, ஹெல்மெட் அணியாமல் பின் அமர்ந்திருந்த நிஷா, சாலையில் தலைவிரித்து விழுந்ததால் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. உடனடியாக காமேஷ் 108 ஆம்புலன்ஸை அழைத்தார். நிஷாவை அருகிலுள்ள குரும்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அங்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். காதலியின் உயிரிழப்பை பார்த்த காமேஷ், மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதார்.
இந்த சம்பவம் குறித்து போத்தேரி போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் இருவரும் வெளியே சுற்றிப் பார்க்க சென்றபோது இந்த சோகம் நேர்ந்துள்ளது. ஹெல்மெட் அணியாததால் ஒரு உயிர் பறிபோனது, மீண்டும் ஒரு முறை ஹெல்மெட்டின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.