தெலுங்கானாவின் கட்வால் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான தேஜேஸ்வர், கடந்த மே 18ஆம் தேதி ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஒரே மாதத்தில், அவரது சடலம் ஆந்திர மாநிலத்தின் நண்டியால் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையின் போது, அவரது புதிய மனைவி ஐஸ்வர்யா, தனது காதலன் திருமல் ராவுடன் சேர்ந்து அவரை கொலை செய்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கின் பின்னணி மிகவும் அதிர்ச்சியளிப்பதாகும். அதாவது ஐஸ்வர்யாவின் தாய் சுஜாதா, ஒரு நிதி நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். அங்கு வேலை செய்த திருமல் ராவுடன் 2016ஆம் ஆண்டு அவர் காதலானார். பின்னர், அவரது மகள் ஐஸ்வர்யாவும் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் போது திருமல் ராவுடன் காதலாகி விட்டார். திருமல் ராவுக்கு 2019ஆம் ஆண்டு திருமணம் ஆகியிருந்தாலும், இருவருக்கும் இடையே தொடர்பு தொடர்ந்தது. சுஜாதா இந்த உறவை முடிக்க முயன்றாலும், ஐஸ்வர்யா மறுத்தார். பின், தேஜேஸ்வரை திருமணம் செய்தார். திருமணம் நிச்சயக்கப்பட்ட பிறகு ஐஸ்வர்யா திடீரென காணாமல் போன நிலையில் மீண்டும் திரும்பி வந்து தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு தேஜஸ்வரை திருமணம் செய்து கொண்டார்.

ஐஸ்வர்யா திருமணமான பின்னும் திருமல் ராவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். வாட்ஸ்அப்பில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் பதிவாகியிருந்தன. கணவனை எப்படி கொலை செய்யலாம் என இருவரும் ராஜா ரகுுவன்ஷி-சோனம் ஹனிமூன் கொலை வழக்கைப் பின்பற்றி திட்டமிட்டனர். ஆரம்பத்தில் பைக்கில் அழைத்துச் சென்று வழியில் தாக்கி, அவரை கொன்று, தனக்கு கடத்தல் நடந்தது போல காவல்துறையை குழப்ப திட்டமிட்டனர். ஆனால் பின் திட்டம் மாற்றப்பட்டு, கூலி ஆட்கள் மூவரிடம் பணம் கொடுத்து கொலை செய்து, சடலத்தை நிலத்தில் புதைக்க முயன்றனர்.

தேஜேஸ்வர் ஒரு நில அளவையாளர் மற்றும் நடன ஆசிரியராக பணியாற்றியவர். ஒருநாள் நில அளவீட்டு வேலைக்காக அழைத்துவிட்டு, காரில் செல்லும்போது அவரை தாக்கி, கழுத்தை அறுத்து, வயிற்றில் கத்தியால் குத்தினர். பின்னர் அவரது சடலத்தை கால்வாயில் வீசினர். இந்த கால்வாயில் தண்ணீர் இல்லாததால், சடலம் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வலதுகைமேல் ‘அம்மா’ என்ற தமிழ் வார்த்தை பச்சை முத்திரை அடையாளமாக இருந்து, அவரது உடல் உறுதி செய்யப்பட்டது.

இந்த கொடூர திட்டத்தில், ஐஸ்வர்யா, திருமல் ராவ், அவரது தாய் சுஜாதா, திருமலின் தந்தை (ஓய்வு பெற்ற காவலர்), மூன்று கொலைகாரர்கள் மற்றும் தேஜேஸ்வரின் அண்டைவீட்டுக்காரர்  என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமல் ராவ், தப்பிச் செல்ல லடாக் மற்றும் அந்தமான் தீவுகளுக்கான விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். தேஜேஸ்வர் காணாமல் போனதும், அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்ததன் பேரில், இந்த பயங்கர சதி முறையறிந்து காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்தது. தற்போது, இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.