உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் அமித் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு கச்சேரியில் நடனமாடி வந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில நாட்களுக்குப் பின் அமித் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் அமித்தின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. இதனால் அவரது தாய் அமீரிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். எனவே அவர் தனது மனைவியை டெல்லிக்கு அழைத்துச் சென்றார்.

தற்போது 3 வருடங்கள் கழித்து அமித் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவருடைய தாய் அவரை பார்த்ததும் கோபமடைந்த நிலையில் தகராறில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து அவர்களுக்கிடையே தகராறு முற்றிய நிலையில் அமித்தின் தாய் மற்றும் சகோதரிகள் சேர்ந்து இரும்பு கம்பி, கட்டை போன்றவற்றை கொண்டு அவரை அடித்தனர். அந்த தாக்குதலில் அவருக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில், அவருடைய மனைவி அவரை காப்பாற்ற முன்வந்தார்.

அதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அமித் மற்றும் அவரது மனைவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அமித் பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போது அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அமித்தின் தாய் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.