இன்றைய காலகட்டங்களில் பல இடங்களில் பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் போலியான வங்கி கணக்குகளை தொடங்கி சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக சிபிஏ அதிகாரிகள் ராஜஸ்தான், டெல்லி, உத்திரபிரதேசம், அரியானா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் 42 இடங்களில் உள்ள 700 கிளைகளில் சோதனை நடத்தப்பட்டது.

அதில் 8.5 லட்சம் போலி வங்கி கணக்குகள் தொடங்கி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கணக்குகள் அனைத்தும் போலி ஆவணங்களை பயன்படுத்தி தொடங்கப்பட்டுள்ளதாகவும், கேஒய்சி விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த கணக்குகள் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ சைபர் குற்றவாளிகள் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இது போன்ற வங்கி கணக்குகளை தொடங்குவதற்கு வங்கி அதிகாரிகள் உதவி செய்ததாகவும் சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. ஒரு தடவை மட்டுமே இந்த வங்கி கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோசடி செய்யப்படும் பணம் ஒரே வங்கி கணக்கிற்கு வந்தபின் பல வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளின் அதிரடி சோதனைக்கு பிறகு வங்கி ஊழியர்கள், முகவர்கள், இடைத்தரகர்கள், வங்கி கணக்கு தாரர்கள் என 9 பேர் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டன. மேலும் அவர்களிடமிருந்து டிஜிட்டல் ஆதாரங்கள், முக்கிய ஆவணங்கள், வங்கி கணக்கு தொடக்க ஆவணங்கள், செல்போன்கள், பண பரிமாற்று விவரங்கள் போன்றவை கைப்பற்றப்பட்ட நிலையில் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.