
ஆப்பிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட நாடு மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இதன் தலைநகரான பாங்கி பகுதியில் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் தற்போது நடப்பாண்டிற்கான இறுதி தேர்வுகள் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சம்பவ நாளில் மாணவர்கள் அனைவரும் பள்ளியில் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பயங்கர சத்தம் கேட்டதால் மாணவர்கள் அனைவரும் பயத்தில் வெளியே ஓடினர். இதைத்தொடர்ந்து பள்ளி கட்டிடத்தின் உள்ளே திடீரென தீ பற்றிய நிலையில் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.
இந்த தகவல் உடனடியாக மீட்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 250 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகள் விபத்து நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்திய போது பள்ளியின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் பணி நடைபெற்றதாகவும், திடீரென வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவத்திற்கு அதிபர் பாஸ்டின் ஆர்க்கஞ்ச் டூடேரா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன் 3 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.