
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் பகுதி முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வருகை புரிந்து மலையின் அழகை ரசித்து செல்கின்றனர். கொடைக்கானலின் மலைப் பகுதிகளில் போதை காளான் விற்பனை என்பது ஏற்கனவே நடந்து கொண்டிருந்த நிலையில் காவல்துறையினரின் எச்சரிப்பால் போதை காளான் விற்பனை என்பது குறைந்துவிட்டது.
ஆனால் தற்போது போதை காளான் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கொடைக்கானல் பகுதிக்கு வரும் வெளி மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். அவர்கள் அங்குள்ள பூம்பாறை, கிளாவரை, கூக்கால், மன்னவனூர் போன்ற கிராமங்களில் கூடாரம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வெளி மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை குறி வைத்து இந்த போதை காளான் விற்பனை என்பது செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சில நபர்கள் போதை காளான் மீது தேனை ஊற்றி சாப்பிட்ட நிலையில் அதனை விடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் போதை காளான் விற்பனை நடைபெறுகிறது என்பது சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.