மகாராஷ்டிரா மாநிலம் லாதூரில், மூன்று கல்லூரி மாணவிகள் ஒரு ஸ்கூட்டரில் வேகமாக பயணித்ததற்காக, அவர்களை ஒரு போக்குவரத்து காவலர் இடைமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுத்தியுள்ளது.

நகரின் முக்கிய சாலையில், ஸ்கூட்டரில் வேகமாகவும், சட்டவிரோதமான முறையில் மூன்று பேர் ஒரே வாகனத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போக்குவரத்து காவலராக பணியாற்றும் பிரணிதா முஸனே என்ற பெண் காவலர் அவர்களை தடுத்து நிறுத்தி, கடுமையாக மிரட்டி அவர்களை தள்ளி, கன்னத்தில் அறைந்துள்ளார்.

சம்பவத்தின்போது காவலர் தகாத வார்த்தைகள் பயன்படுத்தியதோடு, மாணவிகள் மன்னிப்புக் கேட்டும் தாக்குதல் தொடர்ந்தது என பொதுமக்கள்  தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, காவல்துறை அதிகாரிகளின் நடத்தை குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு, பொது இடங்களில் சட்டத்திற்கும், ஒழுக்கத்திற்கும் அடிப்படை மரியாதை இருக்க வேண்டுமென்ற வலியுறுத்தல்களும் உருவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது லாதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகள் மீது எடுத்த நடவடிக்கை அளவுமீறியதாக, பலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு காவல்துறைக்கு முறையான பயிற்சி, மனநிலை கட்டுப்பாடு முக்கியம் என வலியுறுத்தி வருகின்றனர்.