கான்பூர் நகரத்தில் காவல்துறைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில், ஒரு முக்கிய குற்றவாளி காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரின் உதவியுடன் தப்பிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த ஜூன் 12ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், நவாப்கஞ்ச் மற்றும் கோஹ்னா காவல் நிலைய போலீசாரால் நடத்தப்பட்ட சோதனையின் போது இடம்பெற்றுள்ளது.

தீரஜ் கும்பலின் முக்கிய உறுப்பினர் அனூப் சுக்லாவை கைது செய்ய வந்த போலீசாருக்கு முன்பாகவே, புறக்காவல் நிலைய பொறுப்பாளர் ஆதித்யா பாஜ்பாய் மற்றும் காவலர் விஜய்ராஜ் அவரை எச்சரித்து, தப்பிக்க உதவியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் முழு காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காணொளியில், அனூப் சுக்லா தனது பையை எடுத்துக் கொண்டு, போலீசாரின் சைகைக்கு ஏற்ப அந்த இடத்திலிருந்து ஓடிச் செல்லும் துல்லிய காட்சிகள் பதிவாகியுள்ளன.

இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இரு போலீசாரையும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளனர்.

மேலும், கர்னல்கஞ்ச் உதவி டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதில், குற்றவாளி தப்பிச் செல்வதில் புறக்காவல் நிலைய பொறுப்பாளருக்கும், கான்ஸ்டபிளுக்கும் நேரடி தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இருவர் மீதும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு எதிராக மேலும் விசாரணை நடைமுறையில் உள்ளது.

இந்த சம்பவம் காவல் துறையின் நம்பகத்தன்மை மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக்காகக் காத்திருக்க வேண்டிய போலீசாரே குற்றவாளிகளை காப்பாற்றும் நிலைக்கு சென்றிருப்பது கோரமானது.

சம்பவம் குறித்து பொது மக்களிடையே கடும் கண்டனம் கிளம்பியுள்ளது. சிபிஐ வழக்கு பதிவு செய்து, காவல் துறையின் ஒழுங்கு மீறல் நிதானமாக விசாரிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்படுகின்றது.