கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளது. இதேப் போன்று பெட்டமுகிலாளம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கும் குழந்தை திருமணம் நடந்துள்ளது. தற்போது இந்த இரு சிறுமிகளும் கர்ப்பமடைந்துள்ள நிலையில் அரசு மருத்துவமனையில் பதிவு செய்ய முற்பட்டனர்.

அப்போது இரு சிறுமிகளுக்கும் 16 வயது என்பதால் குழந்தை திருமணம் நடந்தது தெரிந்துவிடும் என்று பயந்து போன உறவினர்கள் அவர்களின் ஆதார் கார்டுகளில் உள்ள பிறந்த ஆண்டை மாற்ற திட்டமிட்டனர். அதன்படி தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள முகமது ஜலால் உல்லார் என்பவரின் கடைக்கு சென்று அவரிடம் ஆதார் கார்டை மாற்றித் தர கேட்டுக் கொண்டனர்.

அதற்கு முகமது அந்த இரு சிறுமிகளின் பிறந்த ஆண்டையும் மாற்றி போலி ஆதார் கார்டை தயார் தயாரித்து அவர்களிடம் கொடுத்துள்ளார். இதன் மூலம் அந்த சிறுமிகள் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக உதவி தொகையும் பெற்றுள்ளனர். இதே போலவே போட்டோ ஸ்டூடியோ உரிமையாளரான ரஞ்சித் என்பவர் உதவித்தொகை பெறுவதற்காக ஆதார் கார்டில் வயதை மாற்றிக் கொடுத்ததும் தெரிய வந்தது.

இதனை அறிந்த வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் போலி ஆதார் தயார் செய்து கொடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முகமது ஜலால் உல்லா மற்றும் போட்டோ ஸ்டூடியோவின் உரிமையாளர் ரஞ்சித் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஆதார் கார்டை மாற்றுவதற்கு திட்டமிட்ட சிறுமியின் உறவினர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.