விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உதவி செய்து விழா மேடையில் உரையாற்றினார். அவர் கூறியதாவது, இங்கு தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெற்றது.

இந்த ஊர் மக்களுக்கு தமிழக வெற்றி கழகம் எப்போதும் நன்றி உணர்வோடு இருக்கும். விஜயின் மாநாட்டிற்காக பலர் இடம் கொடுத்தனர். மாநாட்டின் பார்க்கிங் வசதிக்காக 427 ஏக்கர் இடம் கொடுத்தனர். நம் கட்சி தலைவர் விஜய் சிறிய உதவி செய்தாலும் கடைசி வரை மறக்கக்கூடாது என கூறுவார்.

மூன்று மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய விஜய் 18 லட்ச ரூபாய் கொடுத்தார். அதனை போட்டோ எதுவும் எடுக்கக் கூடாது என கட்டளையிட்டார். தாய்மார்கள் வயிற்றில் குழந்தை இருக்கும்போதே விஜயின் பாட்டு கேட்டாலே அசைவு இருக்கும்.

60 நபர்களுக்கு தினம் தோறும் ரத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் இருக்கிறது. மக்கள் சந்தோஷத்துடன் தமிழக வெற்றி கழகத்தை அழைக்கிறார்கள் என்றால் அதற்கு விஜய் தான் காரணம்.

விஜய் பெயரை வைத்து கொண்டு சேவை செய்யும் கட்சியாக இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கண்டிப்பாக 2026 தேர்தலில் வெற்றி பெறும். விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக வருவார். அவரின் முகத்திற்காகவே மக்கள் வாக்களிப்பார்கள்.

தமிழக வெற்றி கழகத்தில் தவறு செய்பவர்கள் இல்லை. அப்படி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக வெற்றிக்கழக கட்சி துண்டினை போட்டுக்கொண்டு பிரச்சனை செய்வது டிரெண்ட் ஆகி வருகிறது.

அப்படி இருப்பவர்கள் 10 நாட்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகத்திற்கு வந்தவர்களாக இருக்கிறார்கள். அரசியல் பண்ணுவதற்கு தைரியம்,தில் இருக்க வேண்டும். எத்தனை வழக்குகள் போட்டாலும் அரசியல் செய்வோம். முன்னாடி இருந்து சந்திக்க வேண்டும். பின்னாடி இருந்து எதையும் குத்த கூடாது. நாங்கள் யாரை பற்றியும் கவலைப்பட மாட்டோம் என கூறியுள்ளார்.