
மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
மேலும் பாஜக கட்சியின் சார்பில் தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் வீடியோ படம் ஒன்று திரையிடப்பட்டது.
அதில் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் மற்றும் அண்ணா பெரியார் போன்றவரை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. அந்த மாநாடு முடிவடைந்த நிலையில் அந்தவீடியோ குறித்து அவதூறான வீடியோக்கள் திரையிட்டதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது, திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பயத்தை அந்த மாநாடு உண்டாக்கியுள்ளது. அதனால் அவர்கள் மாநாடு குறித்து தவறாகத்தான் கூறுவார்கள். மேலும் முருக பக்த மாநாடு ஆன்மீகத்தின் அடையாளமாகவும், ஒரு எழுச்சி மாநாடாகவும் அமைந்தது.
அந்த மாநாட்டில் முருக பக்தர்கள் கோடிக்கணக்கான பேர் குவிந்ததன் காரணமாக மக்கள் மத்தியில் மாற்றம் வந்துள்ளது. அதுவே திமுக அரசிற்கு மிகப்பெரிய ஏமாற்றமாகும் என கூறினார். மேலும் இது குறித்து பேசிய அவர், அதிமுகவில் பாஜக கூட்டணி வைத்திருப்பதால் தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியவில்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.
அதிலிருந்து தெளிவாக தெரிகிறது திமுக கட்சியோடு அவர் மனதளவில் உறவை உறவை முறித்துக் கொண்டுள்ளார். பெயரளவில் மட்டுமே கூட்டணியில் இருந்து வருகிறார். மேலும் அதிமுகவுடன் கூட்டணி வருவது குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுப்பார் என கூறினார்.