
மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக தனது மகளை அடித்து கொன்ற தந்தையின் செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அட்பாடி தாலுகாவில் உள்ள நெல்கரஞ்சி கிராமத்தைச் சேர்ந்த தோண்டிராம் போசலே (45), ஒரு பள்ளியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
அவரது மகள் சாதனா (16) மருத்துவராகும் கனவில், கடந்த வாரம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்றிருந்தார். ஆனால், எதிர்பார்த்ததைவிட குறைந்த மதிப்பெண்கள் கிடைத்தது குறித்து, சனிக்கிழமை இரவு தந்தை மகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் மோசமான நிலையில் மாறியதையடுத்து, தந்தை தோண்டிராம் போசலே, தனது மனைவி மற்றும் மகன் முன்னிலையில், மாவு அரைக்கும் இயந்திரத்தின் மரக் கைப்பிடியை எடுத்துக் கொண்டு மகளின் தலை மற்றும் உடலில் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் கடுமையாக காயமடைந்த சாதனா, உடனே சாங்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர் பரிசோதனை அறிக்கையின்படி, பலத்த தாக்குதலால் ஏற்பட்ட உடல் காயங்கள் காரணமாகவே அந்த இளம்பெண் உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, அட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் குற்றம் சாட்டப்பட்ட தோண்டிராம் போசலேவை கைது செய்துள்ளனர்.
சிறுமி சாதனா மருத்துவம் படித்து குடும்பத்தின் பெருமையை உயர்த்த வேண்டும் என்பதற்காக முயற்சி செய்த நிலையில், தனது கனவுகள் நொடிகளில் சிதறி விட்டதாக கூறி, அக்கிரமமான தந்தையின் செயல் சமூகத்தினுள் பெரும் வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.