மேகாலயாவின் தேனிலவுக் கொலை வழக்கில் சோனம் ரகுவன்ஷி செய்த கொடூரம் மக்கள் மனதில் இன்னும் அழிந்துவிடவில்லை. இதேபோன்று, ராஜஸ்தானின் பவானிமண்டி நகரத்தில் ஜலாவர் மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜ் என்ற பெண், தனது கணவர் மணீஷ் ரத்தோர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராம்நகர் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், இரவு தூங்கிக் கொண்டிருந்த கணவரை சரோஜ் என்ற பெண் தாக்கியதாக கூறப்படுகிறது.

கணவர் காயமடைந்த பிறகும் அறையை வெளியே இருந்து பூட்டி, கதவைத் திறக்காமல் சுமார் 10 நிமிடங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த குழந்தைகள் கதறிக் கூச்சலிட்டபோதும் சரோஜ் கதவைத் திறக்க மறுத்துள்ளார்.

பின்னர், பலத்த தீக்காயங்களுடன் துடித்த மணீஷ், தன்னுடைய சகோதரியிடம் உதவி கேட்டார். அவர் உடனடியாக பவானிமண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் நிலை மோசமாக இருந்ததால், ஜலாவர் S.R.G மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார். குடும்பத்தினர் கூறியதன்படி, சரோஜ் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். பவானிமண்டியில் கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

ராம்சேவக் என்ற குத்தகைதாரருடன் சரோஜுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மணீஷ் இந்த உறவை எதிர்த்த நிலையில், சரோஜ் தனது நடவடிக்கைகளை மாறிக்கொள்ளவில்லை.

விசாரணையின் போது, சரோஜ் கடந்த சில மாதங்களாக யூடியூப்பில் கொலை செய்வது எப்படி என தேடி பார்த்து வந்தது தெரியவந்துள்ளது. அதன்பேரில், திட்டமிட்டு தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காயமடைந்த மணீஷ் ரத்தோர் மருத்துவமனையில் நடந்த விசாரணையில் முழு சம்பவத்தையும் விளக்கியுள்ளார். அவருடைய சகோதரி சந்தோஷும் இதை உறுதி செய்துள்ளார். தற்போது சரோஜை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.