
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டம் கங்கிரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நக்லா ஹிமாசல் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ரிஷி குமார், ஜூன் 17ம் தேதி இரவு மர்மமான முறையில் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் மறுநாள் காலை அவரது மாமாவின் வீட்டருகே துணியில் மடக்கி வைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது காதுப்பின்புறத்தில் துப்பாக்கிச்சூட்டு காயம் இருந்தது.
இந்த சமயத்தில், ரிஷியின் மனைவி லலிதா, இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர்தான் தன் கணவனை கொலை செய்திருக்க வேண்டும் என குற்றம் சாட்டினார். “அந்த நபர் ரிஷியை மொபைல் திருடியதாக பொய்யாக பழி சுமத்தியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அதில்தான் கொலை நடந்தது” என கூறினார். ஆனால் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அதைவிட மோசமான சதி ஒன்று வெளிவந்தது.
அதாவது ரிஷியின் மனைவி லலிதா, திருமணத்திற்கு முன்பே அவரது உறவினரான நீரேஷுடன் காதல் உறவில் இருந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் அந்த உறவு தொடர்ந்தது. ரிஷிக்கு இந்த விவகாரம் திடீரென தெரிய வந்தது. இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தன் கணவனை லலிதா மற்றும் நீரேஷ் இருவரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சர்க்கிள் அதிகாரி தனஞ்ஜய் சிங் கூறுகையில், “இது திட்டமிட்டு செய்த கொலை. திருமணத்தின் பின் தொடர்ந்த கள்ளக்காதலால் இந்த கொலை நடந்துள்ளது” எனக் கூறினார். ஜூன் 19ம் தேதி, ரிஷியின் உடலுக்கு பிரேத பரிசோதனையின் பின் இறுதி சடங்குகள் நடைபெற்றன.
மேலும் லலிதா மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.