உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள சஃபிபூர் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த அதிரடியான சம்பவத்தில், 16 வயது சிறுவன் ஸ்ருஜன் மிஸ்ராவின் விழிப்புணர்வு மற்றும் தைரியத்தால் ஒரு பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

அதாவது, தபௌலி திருப்பம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் மற்றும் மண் மூழ்கும் நிலையை கவனித்த சிறுவன், சிவப்பு டி-சர்ட்டை அசைத்து ரயிலை நிறுத்தியதில் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

கடந்த ஜூன் 17-ஆம் தேதி காலை 4:55 மணிக்கு கான்பூர்-பாலமாவ் பயணிகள் ரயில் (54336) சஃபிபூர் நிலையத்திலிருந்து புறப்பட்டது. அதே நேரத்தில், தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஸ்ருஜன், தண்டவாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவையும் விரிசலையும் கவனித்து உடனடியாக தனது சிவப்பு டி-சர்ட்டை கழற்றி அசைத்தார்.

அந்த சிக்னலை கவனித்த லோகோ பைலட் ரயிலை உடனடியாக நிறுத்தினார். பின்னர், ரயில்வே அதிகாரிகள் வந்துச் சேதமடைந்த தண்டவாளத்தை சரிசெய்து ரயிலை மீண்டும் இயக்கினர்.

அந்த வீர செயலை செய்த  ஸ்ருஜனின் செயலுக்கு ரயில்வே அதிகாரிகள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். “ஒரு சிறுவனின் சுறுசுறுப்பான நடவடிக்கையால் பெரிய  அளவிலான பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது,” என மொராதாபாத் பிரிவு டிஆர்எம் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ருஜனின் குடும்பம் ஏழ்மை நிலைமையிலிருந்தாலும், அவரது புத்திசாலித்தனமும், துணிச்சலும் சமூகத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.  அந்த நேரத்தில் ரயிலில் பயணித்த பயணிகள் தங்கள் அனுபவங்களை கூறுகையில், திடீரென்று பிரேக்குகள் போடப்பட்டதாகவும், பயம் தொற்றிய நிலையில் இருந்தனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புக்காக கீழே இறங்கிய ரயில் ஊழியர்கள், தண்டவாளம் முற்றிலும் சேதமடைந்திருப்பதை உறுதிப்படுத்தினர். பின்னர், ரயில்வே பொறியியல் குழு வந்துச்சேதத்தை சரிசெய்து ரயிலை மீண்டும் இயக்கியது.

இச்சம்பவம் ஸ்ருஜன் மிஸ்ரா போன்ற இளைஞர்களின் விழிப்புணர்வும் மனிதநேயமும் இன்னும் இவ்வுலகில் நம்பிக்கையை உறுதி செய்கின்றன. சமூகமும் அரசும் இப்படியான சிறுவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே அனைவரது எண்ணமாக உள்ளது.