தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தனிப்படை அமைத்து சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை காவல்துறையினர் மற்றும் வட பாகம் காவல் துறையினர் நேற்று இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அம்பேத்கர் நகர் சந்திப்பு பகுதியில் வரும் வாகனங்களை அவர்கள் சோதனை செய்து கொண்டிருந்தபோது சிலர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முருகன், கோபி மற்றும் சடை மாரியப்பன் என்பதும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து மொத்தம் 8 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.