
திமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி பம்பல் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, போன தேர்தலில் தோல்வி அடைந்ததற்கும் ஆட்சிக்கு வந்ததற்கும் நாங்கள் தான் காரணம். முதலில் எங்கள் தளபதி ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடையை மூடி விடுவோம் என்று கூறினார்.
நாங்கள் டாஸ்மாக் கடையை ஒட்டுமொத்தமாக மூடி விடுவோம் என்று கூறினால் அனைவரும் எங்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் குடிகாரர்கள் எல்லோரும் சேர்ந்து பிரச்சாரத்தை தொடங்கியதே டாஸ்மாக்கில் தான். அங்கு சூப்பர்வைசரும் சேல்ஸ்மேனும் தான் தேர்தல் பிரச்சார கருவி. ஐந்து ரூபாய் பத்து ரூபாய் குறையா கொடுத்தாலும் பரவாயில்லை இதுதான் கடைசி கல்லாவில் வாங்கி போடுகிறோம் என்றார்கள்.
சோறு கூட இல்லாமல் இருந்துவிடலாம் ஆனால் குடிக்காமல் எப்படி இருக்க முடியும் என நினைத்து இவர்கள் அனைவரும் ஓட்டு போடக்கூடாது என்று முடிவுக்கு செய்ததால் நாங்கள் தோற்றுவிட்டோம். இந்த தேர்தலில் நிறைய பேர் மூடுவீங்களான்னு கேட்டதற்கு நாங்கள் வாயை மூடிவிட்டோம். நான் இப்ப சொல்கிறேன் இது திமுகவின் கருத்தோ அல்லது முதல்வர் ஸ்டாலினின் கருத்தோ கிடையாது.
எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் மதியம் 12 மணிக்கு கடையை திறந்து விட்டு இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடையை மூடுங்கள் என்று சொல்ல மாட்டேன். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கடையை திறந்து வைப்பேன். யாருக்கும் வஞ்சனை இல்லை குடிக்கிறவன் தான் குடிப்பான்.
குடிக்கிறவர்கள் அவர் சொல்லித் திருந்துவார் இவர் சொல்லித்திருந்துவார் என்றெல்லாம் கிடையாது. அவரே திருந்தினால் மட்டும்தான் உண்டே தவிர யார் சொல்லியும் திருத்த முடியாது. இது என்னுடைய கருத்து. மேலும் நான் 24 மணி நேரமும் கடையை திறந்து வைப்பேன் என்று சொன்னதற்கு காரணம் குடிக்கிறவன் நாட்டுக்கு தேவை இல்லை என்பதால் தான் என்று கூறினார்.