திண்டுக்கல் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான கிணற்றில் கடந்த 15ஆம் தேதி கை கால்கள் கட்டப்பட்டு ஒரு ஆணின் சடலம் கிடந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் பூத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சலூன் கடைக்காரரான ஜோதிமணி(35) என்பது தெரியவந்தது.

சந்தேகத்தின் பேரில் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த கோமதி(33), அவரது தந்தை நடராஜன்(55), தாய் நீலா(50) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது மாத்திணி பட்டியைச் சேர்ந்த முருகன்(48) என்பவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி கோமதி. இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முருகனின் இரண்டாவது சகோதரர் ஜோதிமணி இவர் தனது அண்ணனின் குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும் உதவியாகவும் இருந்துள்ளார்.

மேலும் கோமதியை உடல் மற்றும் மனரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து கோமதி தனது தந்தை நடராஜன், தாய் நீலா, தங்கை கணவர் ஸ்டாலின் ஆகியோரிடம் கூறியுள்ளார். ஜூன் 11ஆம் தேதி கோமதி தனது கொழுந்தனுக்கு உளுந்தங்களியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார்.

அதன் பிறகு காபியிலும் 15 க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார். அதன் பிறகு மயங்கிய ஜோதி மணியை ஸ்டாலின், அவரது நண்பர்களான ஆரோக்கியசாமி, குட்டி முத்து ஆகியோர் தூக்கி சென்ற கை, கால்கள் கட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது.

இதனால் மூச்சு திணறி அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.