
பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும், அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவருமான ஜி.கே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ஜிகே மணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த சேலம் மேற்கு தொகுதியில் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்ததாக மருத்துவமனையில் அனுமதியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சேலத்தில் இன்று நடைபெற உள்ள பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்க உள்ள நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இன்று அவர்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
அன்புமணியின் கூட்டங்களில் பங்கேற்கும் முக்கிய நிர்வாகிகளை ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கி வரும் நிலையில் பாமக வின் 2 முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.