மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில், ஓரினச் சேர்க்கை திருமணம் ஒன்று சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. நௌகான் தாலுகாவின் மௌசாஹானியா என்ற கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான கிராந்தி என்ற பெண், அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான காயத்ரி ராய்க்வாரை கடந்த ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது, ஜூன் 17, 2025 அன்று கிராந்தி தாலுகா அலுவலகத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து இந்த தகவலை அரசு முறையில் உறுதி செய்துள்ளார்.

பிரமாணப் பத்திரத்தில், கிராந்தி தன்னுடைய திருமணம் அவரது சொந்த விருப்பப்படி நடைபெற்றதெனவும், எந்தவொரு குடும்ப உறுப்பினருடனும் இனி தொடர்பு வைத்திருக்க விரும்பவில்லை என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது வாழ்க்கையை தானாக முடிவெடுத்து நடத்த விரும்புவதாகவும், எதிர்காலத்தில் துன்புறுத்தல்கள் ஏதும் ஏற்பட்டால், அதற்குப் பொறுப்பு தனக்கே என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவம் தற்போது சமூக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து உள்ளது. இதற்கான நிர்வாக அனுமதி இல்லாவிட்டாலும், சட்ட ரீதியாக இருவரும் வயது வந்தவர்கள் என்பதால், கிராந்தியின் பிரமாணப் பத்திரத்தை நிர்வாகம் அமைதியாக ஏற்றுக்கொண்டுள்ளது. இது போன்ற ஓரினச் சேர்க்கை திருமணங்கள் இப்பகுதியில் புதிதல்ல. ஏற்கனவே, இதே நௌகான் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்ட சம்பவமும் கடந்த மாதங்களில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் ஊர்மக்கள் மத்தியில் கலந்த மனப்பாங்குகளையும், சமூக விருப்பங்களையும் பிரதிபலிக்கும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஒப்புதலின்றியும், துணிச்சலுடன் தனது விருப்பங்களை பிரமாணப் பத்திரம் மூலம் உறுதிப்படுத்திய கிராந்தியின் முடிவு, இதுபோன்ற சம்பவங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.