ராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூரில், பைக்கில் வந்த ஒரு திருடன்  ஒரு பெண்ணின் பையை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது, அந்த பெண் சாலையில் கீழே விழுந்து, பலத்த காயங்களுடன் கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.

 

ஜெய்ப்பூரின் ஷியாம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நிர்மன் நகர் காலனியில் வசிக்கும் வந்தனா என்பவர், ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் சந்தையில் இருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, பைக்கில் வந்த மர்மநபர், அவரது வலது கையில் இருந்த பையை பறிக்க முயன்றார். வந்தனா தன்னுடைய பையை இறுக்கமாகப் பிடித்திருந்ததால், அந்த நபர் பையை பறிக்க முடியாமல் இருந்தார். ஆனால், அதே நேரத்தில் வந்தனா சமநிலையை இழந்து சாலையில் விழுந்தார்.

விழும் தருணத்தில், அவரது கைகள், கால்கள் மற்றும் முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதிலும், தலையின் வலது பக்கத்தில் கடுமையான தாக்கம் ஏற்பட்டதால், அவரது மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளதாக மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்ற பிறகு, கோமா நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பரவியுள்ளன.

இதுகுறித்து, ஷியாம் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தல்பீர் சிங் கூறுகையில், “சம்பவத்தில் ஈடுபட்டவரை பிடிக்க பல்வேறு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை விரைவில் கைது செய்வோம்” என தெரிவித்தார்.

இந்த சம்பவம் ஜெய்ப்பூரில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளதோடு, பொதுமக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.