திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொலை செய்து, விபத்து என நாடகமாடிய காதலன் தீபன் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரி (27), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

முன்னதாக ‘ஸ்பார்க் விண்டோ’ என்ற நிறுவனத்தில் வேலை செய்யும் போது, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தீபனுடன் (28) பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சுமார் ஏழு ஆண்டுகளாக காதல் தொடர்ந்த நிலையில், விக்னேஷ்வரியின் குடும்பத்தில் திருமண முயற்சிகள் தொடங்கியதால், அவர் தீபனை திருமணம் செய்ய வலியுறுத்தினார்.

ஆனால் தீபன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். ஏப்ரல் 2ஆம் தேதி இரவு விக்னேஷ்வரியை அழைத்துச் சென்ற தீபன், தாம்பரத்தில் உள்ள சுடுகாடு பகுதியில், சுத்தியால் தலையில் அடித்து கொலை செய்தார். பின்னர், இதை விபத்து என காட்ட டிரான்ஸ்பார்மருக்கு அருகே விக்னேஷ்வரியின் உடலையும், ஸ்கூட்டியையும் போட்டு விட்டு தப்பியோடினார்.

அதிகாலை அந்தப் பகுதியாக சென்றவர்கள் தகவலளித்ததைத் தொடர்ந்து, முதலில் இது விபத்து எனக் கருதிய போலீசார், சந்தேகங்கள் ஏற்பட்டதால் தீவிரமாக விசாரித்தனர். மொபைல் தகவல்கள், கால் பதிவுகள் மற்றும் சைபர் அணியின் உதவியுடன் தீபனின் இடத்தை கண்டுபிடித்து போலீசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையில், “திருமணம் செய்ய வேண்டுமென விக்னேஷ்வரி கட்டாயப்படுத்தியதால், கோபத்தில் கொலை செய்தேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கொடூர சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியையும், சமூகத்தில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.