தமிழக அரசின் சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்து, இப்போது வரை முதிர்வுத் தொகை பெறாத பயனாளிகள், தேவையான ஆவணங்களுடன் உரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.

இந்தத் திட்டம் பெண்களின் கல்வி முன்னேற்றம், பாலின சமத்துவம், மற்றும் குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுடைய குடும்பங்களில், ஒவ்வொரு பெண் குழந்தைக்குமான பெயரில் ரூ.25,000 நிலையான வைப்புத் தொகையாக அரசு முதலீடு செய்யும்.

குழந்தை 18 வயதடைந்ததும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ், சுமார் ரூ.1.5 லட்சம் வரை முதிர்வுத் தொகையாக பெற முடியும். இந்த திட்டத்தில் சேர குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்; ஆண் குழந்தை இருக்கக் கூடாது.

தாயார் 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1,20,000-ஐ கடந்திருக்கக் கூடாது. குழந்தைகள் 01.08.2011 பிறகு பிறந்திருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பம் 3 ஆண்டுக்குள் செய்யப்பட வேண்டும். மேலும், பெற்றோர் தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக வசித்திருக்க வேண்டும்.

22 வயதை தாண்டியும் முதிர்வுத் தொகைக்காக தற்போது விண்ணப்பிக்காதவர்கள் தங்களுடைய வைப்புத்தொகை பத்திரம், தனி வங்கி கணக்கு விவரம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார், வருமானச் சான்று, கருத்தடை அறுவை சிகிச்சை சான்று, ஆண் குழந்தை இல்லையென வட்டாட்சியர் உறுதி சான்று போன்ற ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உள்ள விரிவாக்க அலுவலர் அல்லது நகர் நல அலுவலர்களிடம் நேரில் விண்ணப்பிக்கலாம்.

கண்டறிய இயலாத பயனாளிகளின் விவரங்கள் சென்னை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennai.nic.in வில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.