
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் சமூக வலைதளத்தில் புகழ் பெறுவதற்காக ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட்டு உயிரை இழக்கும் அபாயத்திற்கு சென்று விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் அமெரிக்காவை சேர்ந்த ஒரு 19 வயது பெண்ணிற்கு நேர்ந்துள்ளது. அதாவது அரிசோனா பகுதியைச் சேர்ந்த ரென்னா ஓரூர்க். இவர் சமூக வலைதளத்தில் புகழ் பெறுவதற்காக டஸ்டிங் மற்றும் குரோமிங் என அழைக்கப்படும் சவாலை செய்ய முயன்றார்.
அதாவது இதில் டஸ்டிங் என்பது கணினி கீபோர்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஒரு ஸ்பிரே ஆகும். இந்த ஸ்பிரேவை உள்ளிழுத்து சுவாசிப்பது தான் சவால். அந்த இளம் பெண் தன்னுடைய பெற்றோருக்கு தெரியாமல் ஆன்லைனில் ஏரோசெல் கீ போர்டு கிளீனர்-ஐ ஆர்டர் செய்தார். இதில் அந்த ஸ்ப்ரேவை அவர் சுவாசித்ததால் மாரடைப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரென்னா நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
நான் நிச்சயம் ஒருநாள் பிரபலமாவேன். நீங்கள் கண்டிப்பாக அதை பார்ப்பீர்கள் என்று என்னிடம் என் மகள் கூறி வந்த நிலையில் இப்படி சாவின் மூலமாக பிரபலமாவார் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை என தந்தை கண்கலங்கி கூறியுள்ளார். இது போன்ற ஸ்பிரே பாட்டில்களை வாங்குவதற்கு அடையாள அட்டைகள் தேவை இல்லை என்பதால் குழந்தைகளுக்கு கூட அது எளிதில் கிடைத்து விடும்.
எனவே அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மரணம் அடைந்த இளம் பெண்ணின் பெற்றோர் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற ரசாயனங்களை உள்வாங்குவதால் அது தற்காலிகமாக போதையை கொடுத்தாலும் உயிரை எடுக்கும் அளவிற்கு ஆபத்தானது. மேலும் இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் எச்சரித்து வருகின்றனர்.