
இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் கடந்த 11 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 2011-12ம் ஆண்டில் 27.1 சதவீதமாக இருந்த வறுமை விகிதம், 2022-23ம் ஆண்டில் 5.3 சதவீதமாக குறைந்துள்ளதாம். இதன் மூலம் சுமார் 26.9 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
உலக வங்கியின் ‘வறுமை மற்றும் சமபங்கு சுருக்கம்’ என்ற தலைப்பில் வெளியான இந்த அறிக்கையில், தினசரி நுகர்வு அமெரிக்க டாலர் மதிப்பில் 3க்கு (இந்திய மதிப்பில் சுமார் ₹250) கீழாக இருப்பவர்களே வறுமையிலிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2011-12ல் இந்தியாவில் 34.47 கோடி மக்கள் இந்த வரம்பிற்குள் இருந்துள்ளனர். ஆனால், 2022-23ல் இத்தொகை 7.5 கோடியாக குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் வறுமை விகிதம் 18.4 சதவீதத்தில் இருந்து 2.8 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 10.7 சதவீதத்தில் இருந்து 1.1 சதவீதமாகவும் குறைந்துள்ளன. மேலும், பல்திறன் வறுமை குறியீடு (MPI) 2005-06-ல் 53.8 சதவீதமாக இருந்த நிலையில், 2022-23ல் 15.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது இந்திய அரசு எடுத்து வந்த பொருளாதார மற்றும் சமூக நலத்திட்டங்களின் வெற்றியை வெளிப்படுத்துவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.