சமீபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய் விருது வழங்கும் விழா குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார். அவரது கருத்துக்கு த.வெ.கவினர் உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது இணையதள பக்கத்தில் விஜய்க்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் வேல்முருகன் அவர்களே உங்கள் கொச்சையான பேச்சை கண்டிக்கிறேன்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தம்பி விஜய் அவர்கள் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஊக்கம் தரும் அளவிற்கு ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார். சில நேரங்களில் அதில் அவர் பேசிய அரசியல் கருத்துக்களில் கூட எனக்கு மாறுபாடு உண்டு.

ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரை அதிகம் சந்தித்து அவர்களின் அறிவுத்தாகத்தை அறிந்தவள் என்ற வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதை நான் வரவேற்கிறேன்.

“தமிழ் அழகானது உங்கள் மனது தான் அழுக்கானது” குழந்தைகள் அவரை அண்ணா என்று அழைப்பது தமிழில் அன்பின் வெளிப்பாடு மட்டுமே. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு.

ஆனால் அந்த உறவை கொச்சைப்படுத்துவது அந்த குழந்தைகளின் மனதை புண்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவளிக்கும் பெற்றோர்களின் மனதையும் புண்படுத்துவது ஆகும்.

தாங்கள் இவ்வாறு புண்படுத்துவது தமிழ் பண்பாடும் இல்லை. மனித நேயமும் அல்ல. அதனால் திருவேல் முருகன் அவர்களின் கொச்சைப் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என பதிவிட்டுள்ளார்.